குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருள்களுக்குத் தடை விதித்து உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் உத்தரவு பிறப்பித்தாா். அதனைத் தொடர்ந்து அரசு அறிவிப்பாணைகள் வெளியாகின.
அரசின் அறிவிப்பாணையை எதிா்த்தும், குற்ற நடவடிக்கையை எதிா்த்தும் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் புகையிலைப் பொருள்களுக்குத் தடை விதித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில்ம், “உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடைவிதித்த உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
இதையும் படிக்க | ரஞ்சி கோப்பை: ஜடேஜா அணியை வீழ்த்திய தமிழ்நாடு!
எனினும், அதே தீர்ப்பில் புகையிலையை உணவுப் பொருளாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி உணவு பாதுகாப்பு ஆணையர்கள் இந்த விதிமுறையின் கீழ்தான் தடை உத்தரவை பிறப்பித்து வருகின்றனர்.
உச்சநீதிமன்ற சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, அரசு உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.
அதே நேரத்தில் தடையின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக தற்போதுள்ள சட்டம்/விதிகளில் திருத்தம் செய்யலாமா அல்லது புதிய சட்டத்தை இயற்றுவதா என்பதையும் சட்ட வல்லுநர்களுடன் ஆய்வு செய்து வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.