
ஈரோடு: அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த அனைத்து நல்ல திட்டங்களையும் நிறுத்தியதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என்று முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஈரோடு ஆலயமணி மஹாலில் தேர்தல் பணிக்குழு ஆய்வுக் கூட்டத்தில் அவர் தலைமை தாங்கி பேசியதாவது:
அதிமுக ஆட்சியில் பல நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ரூ.12,000 மதிப்புள்ள மடிக்கணினி 55 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன, ரூ.2,500 பழங்கால பரிசாக அனைத்து மக்களுக்கும் வழங்கினோம். ஆனால், திமுக ஆட்சியில் 21 மளிகை பொருள்கள் பொங்கல் தொகுப்பாக வழங்கப்பட்டது. ஆனால், அதை மக்கள் என்றுமே மறக்க முடியாது வெல்லம் வாங்கும்போது ஒழுகிக் கொண்டே சென்றது. வெல்லத்தை சேலம் அல்லது ஈரோட்டில் வாங்கி இருக்கலாம். ஆனால், அதை வெளியூரில் வாங்கினார்கள் எதற்காக என்றால் கமிஷனுக்காக பிறகு திட்டமிட்டு கலெக்சன் அதன் மூலம் கரப்சன் என்பது தான் அவர்களின் கொள்கையாகும்.
இதையும் படிக்க | மோடி ஆட்சியில் ஒவ்வோர் இந்தியரின் கடன் 2.53 மடங்கு அதிகரிப்பு: காங்கிரஸ்
நடப்பாண்டு பொங்கல் தொகுப்பை நிறுத்தி விட்டார்கள். ரூ.1000 வழங்குவதாக கூறினார்கள். போராட்டம் அறிவித்த பிறகு கரும்பு கூட வழங்கப்பட்டது. தாலிக்கு தங்கம், மகளிருக்கு ஸ்கூட்டி உள்பட அதிமுக ஆட்சி கொண்டு வந்த திட்டங்கள் நிறுத்தப்பட்டன.
ஈரோடு கிழக்கு தொகுதி ஈரோடு மாநகராட்சி உள்பட்டதாகும். இந்த மாநகராட்சியில் ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம் கொண்டு வந்தோம், அதையும் தற்போது சிறப்பாக செயல்படுத்தவில்லை. அதேபோன்று அத்திக்கடவு அவிநாசி திட்ட பணிகள் கடந்த 20 மாதங்களாக முடிக்கவில்லை. அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் மருத்துவக் கல்லூரி சேர 7.5% இட ஒதுக்கீடு வழங்கியது அதிமுக அரசு, அவர்கள் ஒரு பைசா செலவில்லாமல் படிக்க வழி செய்தது. இதை எதிர்க்கட்சிகள் வேறு யாருமே கேட்கவில்லை. ஆனால், அதை நாம் செய்தோம்.
கூட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினர்.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களை சுட்டிக்காட்டி அதிமுகவினர் நெஞ்சை நிமிர்த்தி வாக்கு சேகரிக்கலாம். ஏனென்றால் திமுக கொடுத்த வாக்குறுதிகள் 20 மாதங்களாகியும் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக மகளிருக்கு மாதம் ரூ.1000 ஆயிரம், சமையல் எரிவாயு உருளை மானியம் ரூ.100, முதியோர் ஓய்வு ஊதியம் ரூ.1500 ஆக உயர்த்தப்படும் என்றனர் செய்யவில்லை. மாறாக அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட ஓய்வூதியம் பலருக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இதையெல்லாம் சுட்டிக்காட்டி வாக்குகள் சேகரிக்க வேண்டும். ஒவ்வொரு தொண்டரும் தானே தேர்தல் களத்தில் நிற்பதாக கருதி தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை அதிமுக பெற்றது என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும் பழனிசாமி கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...