டிஐஜி விஜயகுமார் மறைவு குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், கோவை சரக காவல்துறை டிஐஜி விஜயக்குமார் ஐபிஎஸ் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
காவல்துறை துணை கண்காணிப்பாளராக தனது பணியை துவங்கி , பின்னர் நேரடியாக இந்திய காவல் பணிக்கு நேரடியாக தேர்வாகி, டிஐஜி அளவிற்கு தன்னைத்தானே வளர்த்துக் கொண்ட பெருமைக்குரிய விஜயக்குமாரின் பணி போற்றத்தக்கது. அவரின் மறைவு காவல்துறைக்கு பேரிழப்பு ,அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
இதையும் படிக்க- கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை: காரணம் என்ன?
காலையில் வழக்கமான நடைபயிற்சி முடித்து வந்த விஜயக்குமார் தனது பாதுகாவலரின் கைத்துப்பாக்கியை வாங்கி, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வருகின்றன, இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது,
ஆகவே விஜயகுமார் ஐபிஎஸ்ஸின தற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்னணியை அறிய வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.