தமிழகம் முழுவதும் நடிகர் விஜய் நடைப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே தனது படத்தின் வெளியீட்டு விழாக்களின் போது நடிகர் விஜய் பேசும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில், அரசியலில் நுழையும் முனைப்பில் தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கம் எனப் பெயர் மாற்றம் செய்து 234 சட்டபேரவை தொகுதிகளுக்கும் பொறுப்பாளா்களை நியமித்தார் விஜய்.
தொடர்ந்து, கடந்த 2021-22 இல் நடைபெற்ற உள்ளாட்சி தோ்தல்களில் சுயேச்சையாக போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினா் கணிசமான வெற்றியை பதிவு செய்தனா். ஒரு சில இடங்களில் அதிமுக, நாம் தமிழா் போன்ற கட்சிகளை பின்னுக்கு தள்ளி 2-ஆம் இடம் பிடித்த நிகழ்வுகளும் அரங்கேறின.
இதன் தொடா்ச்சியாக, கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் தமிழகம் முழுவதும் உள்ள சட்டபேரவை தொகுதிகளில், முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் விதமாக விஜய் மக்கள் இயக்கத்தின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஜூன் மாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 1600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு நடிகா் விஜய் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினாா்.
சென்னை அடுத்த பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனையில் நடிகர் விஜய் நேற்று மேற்கொண்டார். தொடர்ச்சியாக மூன்று நாள்கள் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய் தமிழகம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களின் ஆதரவையும், வரவேற்பையும் பார்க்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் லியோ பட வெளியீட்டுக்கு முன்னதாகவே இந்த நடைப்பயணமானது திட்டமிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, வெங்கட பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்துக்கு பிறகு அரசியலில் கவனம் செலுத்துவதற்காக மூன்று ஆண்டுகள் நடிப்பில் இருந்து விலகுவதாக விஜய் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்தன.
இந்நிலையில், முழுநேர அரசியலில் ஈடுபடத் தொடங்கினால் படத்தில் நடிக்க மாட்டேன் என்று மக்கள் இயக்க நிர்வாகிகளுடனான கூட்டத்தில் பேசியதன் மூலம் விஜய்யின் அரசியல் வருகை உறுதியாகியுள்ளது.
அதிக ரசிகர்களை கொண்ட விஜய்யின் அரசியல் பிரவேசம், தமிழகத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.