
மதுரையில் ஆக.20ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக மாநாடு குறித்து அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
மதுரையில் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிமுகவின் 'வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு' நடைபெற உள்ளது. மேலும் அதிமுக மாநாட்டுக்கான இலச்சினையை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் வெளியிட்டார். அத்துடன் மாநாட்டிற்கான பணிகளை மேற்கொள்ள முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் அடங்கிய ஏழு குழுக்களும் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் மதுரையில் ஆக.20ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக மாநாடு குறித்து அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது. அப்போது மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் என்னென்ன என்பது குறித்து அவர் விவாதித்தார். மேலும் மாநாட்டிற்கான ஏற்பாடுகள், மாநாட்டில் கலந்துகொள்வோர் குறித்தும் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
மாநாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவினருடனும் அவர் ஆலோசனை நடத்தினார். முன்னதாக மதுரையில் நடைபெற உள்ள அதிமுகவின் பொன்விழா மாநாடு, அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...