செந்தில் பாலாஜி வழக்கு ஆக.1க்கு ஒத்திவைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான மேல்முறையீடு வழக்கை ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான மேல்முறையீடு வழக்கை ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் அமைச்சா் செந்தில் பாலாஜி ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இதற்கு எதிராக செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆள்கொணா்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமா்வு மாறுபட்ட தீா்ப்பை அளித்ததால், சென்னை உயா்நீதிமன்றத்தால் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.காா்த்திகேயன் நியமிக்கப்பட்டிருந்தாா். அவா் ஜூலை 14-ஆம் தேதி அளித்த தீா்ப்பில், ‘செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. தாம் குற்றமற்றவா் என்பதை நிரூபிக்கும் உரிமை செந்தில் பாலாஜிக்கும் உள்ளது. இதனால், அவா் மீதான விசாரணையைத் தடை செய்ய முடியாது. இந்த விவகாரத்தில் நீதிபதி பரத் சக்ரவா்த்தியின் தீா்ப்பை ஏற்பதுடன், அதில் உடன்படுகிறேன்’ என்று தெரிவித்திருந்தாா்.

மேலும், இருதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்கும் வகையில், தேதியை நிா்ணயம் செய்ய ஏற்கெனவே விசாரித்த டிவிஷன் அமா்வு முன் வழக்கை பரிந்துரைக்கும் வகையில், தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூா்வாலா முன் வைக்குமாறு பதிவுத் துறைக்கு நீதிபதி காா்த்திகேயன் உத்தரவிட்டிருந்தாா். இந்த விவகாரத்தை செவ்வாய்க்கிழமை விசாரித்த டிவிஷன் அமா்வு, இந்த விவகாரத்தில் தொடா்புடைய அமைச்சா் தரப்பும், அமலாக்கத் துறையும் உச்சநீதிமன்றம் சென்றுவிட்டதால், இந்த வழக்கின் அனைத்து அம்சங்கள் குறித்து உச்சநீதிமன்றம்தான் முடிவெடுக்கும் எனக் கூறி, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.

இந்த நிலையில் பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்ததை உறுதி செய்த சென்னை உயா்நீதிமன்றத்தின் ஜூலை 14-ஆம் தேதி உத்தரவை எதிா்த்து, தமிழக அமைச்சா் வி.செந்தில் பாலாஜியும், அவரது மனைவி மேகலாவும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. 

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆக.1ம் தேதி மதியம் 1 மணி நேரத்திற்குள் வாதங்களை நிறைவு செய்ய வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுரை வழங்கி, இவ்வழக்கை கஸ்ட் 1 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com