

ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால் விடுமுறை நாளில் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் நடைப்பாதையில் நீண்ட வரிசையில் கூட்டம் கூட்டமாக நின்றிருந்தனர்.
கர்நாடகம் மற்றும் கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு உபரி நீர் வரத்து வரத் தொடங்கியுள்ளதால், அண்மையில் காவிரி ஆற்றில் விநாடிக்கு 20,000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தடை விதித்து இருந்தார். இதனால் பிரதான அருவி செல்லும் நடைப்பாதை பூட்டப்பட்டு ஒகேனக்கல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபர நீரின் அளவு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் வெளியேற்றப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 18,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 17 ஆயிரம் கன அடியாக குறைந்தது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்து வரும் போதிலும் இந்த தடை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி செல்லும் நடைப்பாதையில் குவிந்தனர். ஒரு சில சுற்றுலாப் பயணிகள் தடையை மீறி அருவியில் குளிக்க முயற்சி செய்தபோது காவலர்கள் தடுத்து, அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக அறிவுறுத்தினர்.
மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க ஐந்தாவது நாளாகவும், அருவிகளில் குளிக்க மூன்றாவது நாளாகவும் விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுலாப் பயணி ராஜேஸ்வரி கூறுகையில்:
வார விடுமுறையை கொண்டாடுவதற்காக குடும்பத்தினருடன் ஒகேனக்கல் வந்துள்ளோம். கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்ததால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கும் அருவியில் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவிக்கின்றனர். நீர்வரத்து குறைவினால் நடைப்பாதையின் கீழ் தண்ணீர் செல்வதாலும், அருவிகளிலும் குறைந்த அளவு தண்ணீர் கொட்டுவதாலும் சுற்றுலாப் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இல்லை.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அருவிப்பகுதிகளில் கூடுதலாக காவலர்களை நியமித்து சுற்றுலாப் பயணிகளை அருவியில் குளிக்க அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.