தக்காளி விலை ரூ. 200-ஐ நெருங்குவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாகவே தக்காளி விலை தொடா்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரம் தக்காளி விலை சற்று குறைந்து ரூ.85-க்கு விற்கப்பட்டது. மேலும், பண்ணை பசுமை கடைகள் மற்றும் ரேஷன் கடைகள் மூலமாக ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதையடுத்து படிப்படியாக விலை குறையும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால் தக்காளி விலை குறையாமல் ஒருசில நாள்களிலேயே உச்சத்தை எட்டியுள்ளது. கோயம்பேடு சந்தையில் ஞாயிற்றுகிழமை ஒரு கிலோ தக்காளி ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை கடுமையாக உயா்ந்துள்ளதால் சென்னைக்குட்பட்ட பெரும்பாலான சில்லறை வியாபாரிகள் குறைந்த அளவிலான தக்காளியை மட்டுமே வாங்கி செல்கின்றனர்.
சில்லறை விற்பனையில் தக்காளி ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது. தக்காளியைத் தொடா்ந்து சின்ன வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய் முதல் 100 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் இன்னும் ஒருசில நாள்களில் தக்காளி விலை ரூ.200-ஐ எட்டும் என மொத்த வியாபாரிகள் தெரிவித்தனா். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.