
சேலம்: ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூர் புகழேந்தி மீது தாக்குதல் நடத்த காரணமான எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
அதிமுகவை கைப்பற்ற போவது யார் என்ற சர்ச்சையில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையே கடுமையான விவாதங்களும், நீதிமன்ற வழக்குகளும் நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் ஓபிஎஸ் அணியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் சேலத்தில் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் அணியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
எடப்பாடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு ஓபிஎஸ் அணியின் மூத்த நிர்வாகிகள் வைத்திலிங்கம், பெங்களூர் புகழேந்தி, பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்கள் கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வந்த புகழேந்தி மீது எடப்பாடி பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர் காரை தடுத்து நிறுத்தி அவர் மீது தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இருப்பினும் காரில் கதவை திறக்காமல் கார் வேகமாக புறப்பட்டதால் அதிமுகவின் தாக்குதலில் இருந்து பெங்களூர் புகழேந்தி தப்பினார்.
இந்நிலையில், சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகழேந்தி சார்பில் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த நிலையில் பெங்களூர் புகழேந்தி மீது தாக்குதல் நடத்த காரணமான எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் பெங்களூர் புகழேந்தி மீது தாக்குல் நடத்த காரணமான எடப்பாடி பழனிசாமி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இந்த சுவரொட்டி ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளது
இந்த சம்பவம் அதிமுகவினரிடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...