சென்னை: சென்னையில் ஜூன் மாதத்தில் இயல்பான அளவை விட 295 சதவிகிதம் அதிக மழைப்பொழிவு பதிவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய பரவலாக மழை பெய்தது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 160 மி.மீ. மழை பதிவானது.
ஜூன் மாதம் தொடங்கியது முதலே கோடை வெப்பட்டம் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் சென்னையில் அதிகபட்ச மழையும் பதிவாகியிருக்கிறது.
திங்கள்கிழமை காலையுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் 160 மி.மீ. மழை பதிவானது. இதற்கு முன்பு 1996-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 280 மழை பதிவாகியிருந்தது.
இந்த அதிக மழைப்பொழிவு காரணமாக, தமிழகத்திலும், சென்னையிலும் இயல்பான மழைப்பொழிவைக் காட்டிலும் அதிகம் மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அவை விட 295 சதவிகிதம் அதிகமாக மழை பெய்திருப்பதாகவும், சென்னையில் ஜூன் மாதம் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 4 செ.மீ. என்றும், ஆனால் பெய்திருக்கும் மழை அளவு 16 செ.மீ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் தமிழகத்தில் மழைப்பொழிவு சராசரியாக 3.5 சதவிகிதம் பெய்ய வேண்டிய நிலையில், 3.7 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 463 சதவிகிதம் அதிக மழை பெய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் திருவள்ளூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் கனமழை காரணமாக நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.