

கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பணம் செலுத்த வந்தவரிடம் ரூ.1 லட்சம் பெற்றுக்கொண்டு நூதன முறையில் மோசடி செய்த நபரை வடக்கு போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி 16 ஆழது வார்டு கருமாரிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் கார்த்திக் (33), இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
விடுமுறையில் வந்திருந்த கார்த்திக் திங்கள்கிழமை (ஜூன் 26) ஆம் தேதி ரூ.1 லட்சம் ரொக்க பணத்துடன் கம்பத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு வந்தவர் தனது சேமிப்பு கணக்கில் பணம் செலுத்துவதற்காக பணம் டெபாசிட் செய்யும் எந்திரத்திற்கு சென்றார். எந்திரம் பழுதடைந்ததை அடுத்து வங்கி சலான் மூலம் நேரடியாக பணம் செலுத்துவதற்கு சென்றுள்ளார்.
அப்போது, வங்கியில் அறிமுகமில்லாத ஒருவர் தன்னிடம் கைபேசி செயலியில் பணம் இருப்பதாகவும், கார்த்திக் ரூ. 1 லட்சம் ரொக்க பணத்தை கொடுத்தால் அவரது வங்கி கணக்கில் செலுத்தி விடுவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு, கைபேசி செயலி மூலம் செலுத்தியதாக கைபேசியை காட்டினார். கார்த்தியும் அதை பார்த்து சரி என்று கூறியிருக்கிறார்.
பின்னர், தனது வங்கி கணக்கை கார்த்திக் சரிபார்த்த போது கணக்கில் பணம் ஏறவில்லை. இதுகுறித்து அந்த நபரிடம் கைபேசியில் தொடர்பு கொண்ட போது, அந்த நபர் விரைவில் வங்கி கணக்கில் ஏறிவிடும் என்று கூறியுள்ளார்.
பலமணி நேரமாகியும் பணம் கணக்கில் ஏறவில்லை. மீண்டும் அந்த நபரை கைபேசியில் அழைத்த போது அவரது கைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த கார்த்திக் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
ஆய்வாளர் பி. சரவணன், உதவி ஆய்வாளர் இளையராஜா ஆகியோர் வழக்குப் பதிவு செய்து நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.