

கோவை: மதத்தின் பெயரால் மக்களைப் பாகுபடுத்திப் பார்ப்பது மு.க. ஸ்டாலினா? பிரதமரா? என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை உக்கடம் அருகே உள்ள கெம்பட்டி காலனி பகுதியில் இருக்கும் ஒக்கிலியர் பள்ளியில் கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி மையம் கட்டப்பட உள்ளது. இந்த நிலையில் அங்கன்வாடி மையம் கட்ட பூமி பூஜை நடைபெறுகிறது. இந்த பூமி பூஜையை தொடங்கிவைத்த வானதி சீனிவாசன் பின்பு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, திருமண விழாவில் எதிர்க்கட்சிகளை வசைபாடுவது, சாபம் கொடுப்பது திராவிட மாடலா? இது அநாகரிகம். குடும்ப வாரிசு அரசியல் நடத்தும் திமுக குறை கூற அருகதை இல்லை. முதல்வர் திருமண நிகழ்வில் வாழ்த்துக்களை மீறி கடுமையான அரசியல் விமர்சனத்தை திருமண விழாவில் வைத்துள்ளார்.
பிரதமர் மோடி பேசியது 100 சதவீதம் உண்மை. அவர் பொய் பேசவில்லை. குடும்ப ஆட்சி நடக்கவில்லை என சொல்லுங்கள். வாரிசு என்ற காரணத்திற்காக பதவி கொடுக்கவில்லை என்று சொல்லுங்கள். மகன் என்பதால் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு முக்கியத்துவம்.
சட்டம் என்பது நாட்டில் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். மதத்திற்கு ஒரு சட்டம் இருப்பதால் பாதிக்கப்படுவது பெண்கள். மதக் கலவரத்தை உருவாக்குவதாக கற்பனையான விஷயத்தை முதல்வர் சொல்கிறார்.பொது சிவில் சட்டம் காலத்தின் தேவை. முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு நீதியை கொடுத்தது.
சுயநல அரசியலுக்காக பெண்கள் வாய்ப்பை பறிக்கக் கூடாது. கோயில் பிரச்னையில் அரசாங்கத்தால் அணுக முடியவில்லை. பெரியார் மண் என்று சொல்லுகிற இந்த மண்ணில் சாதியில் மக்கள் மனதில் ஏன் மாற்றத்தை கொண்டு வர முடியவில்லை.
உங்கள் அமைச்சர்களே பட்டியல் இன மக்களை இழிவாகப் பேசுகின்றனர். ஜம்முவிற்கு 370 சிறப்பு அந்தஸ்து ரத்து செய்வதனால் அம்மக்கள் ஜனநாயகத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். பொது சிவில் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற வாக்குறுதியை பாஜக தெரிவித்துள்ளது. முதல்வர்தான் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற அடிப்படையில் இந்து மக்களின் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாரா? முதல்வராக வாழ்த்து தெரிவித்துள்ளாரா?
பிரதமர் மோடி அனைத்து மதத்தையும் சமமாகப் பார்க்கிறார். உதயநிதி படத்திலும் நடிக்கிறார், வெளியிலும் நடிக்கிறார்.
திமுகவிற்கு வாக்களிப்பது குடும்ப ஆட்சிக்கு வாக்களிப்பது, ஊழலுக்கு வாக்களிப்பது என நாங்களும் சொல்கிறோம். மதுபான அதிக விலை தொடர்பாக ஆதாரம் கேட்ட அமைச்சர் மருத்துவமனையில் உள்ளார். இந்து அறநிலையத்துறை திட்டமிட்டு சிதம்பரம் கோயில் விவகாரத்தில் வேலை செய்கின்றனர். பிரச்னையை கிளப்பவே செயல்படுகின்றனர். இந்து மத விரோத எதிர்ப்பு நாடறிந்தது. சிதம்பரம் கோயில் பிரச்சனையில் மக்கள் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.