சேலம்: ஆத்தூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் சுரேஷ் (21). இவரது தந்தை செந்தில்குமார் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை குறைவால் உயிரிழந்தார்.
இந்நிலையில் சுரேஷ் மற்றும் அவரது இரண்டு சகோதரிகளும் திருமணம் ஆகாத நிலையில் தனது தாய் சுசீலாவுடன் வசித்து வருகின்றனர்.
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் கார் கம்பெனியில் பணியாற்றிய சுரேஷ், குடும்ப சூழ்நிலை காரணமாக ஆத்தூரில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வசூல் செய்யும் பணியில் கடந்த மூன்று மாதமாக வேலை செய்து வருகிறார்.
இவர் வழக்கமாக காலை 7 மணிக்கு பணிக்கு சென்று, மீண்டும் இரவு 8 மணிக்குள் வீட்டிற்கு வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று இரவு 10 மணியாகியும் வீட்டுக்கு வராததால் அவரது சகோதிரிகள் சுரேஷின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது அவரது செல்போன் அணைக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள், கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து போலீசார் சுரேஷின் செல்போன் எண்னை வைத்து தேடியுள்ளனர். ஆத்தூர் அருகே உள்ள துலுக்கனூர் ஏரி அருகே சிக்னல் கிடைத்ததை தொடர்ந்து, போலீசார் மற்றும் அவரது உறவினர்கள் அங்கு சென்று தேடிப் பார்த்தனர். அங்கு ரத்த காயங்களுடன் சுரேஷ் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
ஆத்தூர் நகர போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து ஆத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜ் தலைமையிலான போலீசார் சுரேஷை ஏரிக்கு அழைத்து சென்று கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டுவந்த வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.