
ஆளுநர் விவகாரத்தில் சட்ட ரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ தகவல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாக அறிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
இதில் சட்டத் துறை வல்லுநர்களும், சட்டத் துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட திமுக மூத்த நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் செந்தில் பாலாஜி வழக்கு குறித்தும் ஆளுநரின் நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ, ஆளுநர் விவகாரத்தில் சட்ட ரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.