தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து புகழ்பெற்ற நடிகர் சரத்பாபு உடல்நலக் குறைவால் இன்று காலமானதாக தகவல் வெளியானது. ஆனால் அந்தத் தகவல் பொய்யானது என சரத்பாபு குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.
ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சமுகவலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு, மெல்ல மெல்ல குணமடைந்து வருவதாக அவரின் குடும்பத்தினர் தற்போது தெரிவித்துள்ளனர். மேலும், சமூக வலைதளங்களில் தவறாக தகவல் பரப்புபவர்களுக்கு அவரின் குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சரத்பாபுவின் சகோதரி விளக்கம்
இது குறித்து பேசிய நடிகர் சரத்பாபுவின் சகோதரி, சமூகவலைதளங்களில் சரத்பாபு குறித்து பரவும் செய்திகள் பொய்யானது. சரத்பாபு, உடல்நிலை தேறி வருகிறார். அவர் தற்போது வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை முற்றிலும் குணமடைந்து விரைவில் செய்தியாளர்களை சந்திப்பார் என நம்புகிறேன். சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
நாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என பல பாத்திரங்களை ஏற்று நடித்தவர் சரத்பாபு. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நெற்றிக்கண், வேலைக்காரன், என பல திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மனதில் பதிந்தார்.
நடிகர் ரஜினிகாந்துடனான அண்ணாமலை, முத்து திரைப்படங்களில் சரத்பாபுவின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.