
சென்னை: சென்னை அருகே காரப்பாக்கத்தில் இளைஞர் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை அருகே உள்ள கண்ணகிநகரைச் சேர்ந்தவர் வே.நித்தியா என்ற பல்லு நித்யா (34). இவர் தனது நண்பர்களுடன் காரப்பாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் உள்ள பிரபலமான உணவகம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது, நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே நித்யாவை, அவரது நண்பர்கள் கிரிக்கெட் மட்டையால் தாக்கினர். இதில் பலத்தக் காயமடைந்து நித்யா, ரத்தக் காயங்களுடன் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், அங்கிருந்து தப்பியோடினர்.
இதற்கிடையே, பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நித்யாவை, அங்குள்ள பொதுமக்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நித்யா, திங்கள்கிழமை காலை இறந்தார்.
இது தொடர்பாக கண்ணகிநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, நித்யாவின் நண்பர் அதேப் பகுதியைச் சேர்ந்த வீ.வீரமருது என்ற தினேஷ் (30) என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இறந்த நித்யா மீது அடிதடி,கொலை மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...