
திருப்பூர்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் 97.79 சதவீதமானவர்கள் தேர்ச்சி பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தது திருப்பூர் மாவட்டம்.
தமிழக அளவில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் வெளியாகிறது. இதில் திருப்பூர் மாவட்டம் 97.79 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இதில், திருப்பூர் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 295 மாணவர்கள், 13 ஆயிரத்து 437 மாணவியர் உள்பட 24 ஆயிரத்து 732 பேர் தேர்வை எழுதினர்.
இதைத்தொடர்ந்து, தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணியானது ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 24 ஆம் தேதி வரையில் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் 10,947 மாணவர்கள், 13,238 மாணவிகள் என மொத்தம் 24,185 தேர் தேர்ச்சி பெற்றுள்ளார். இதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 96.92, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 98.52 என மொத்தம் 97.79 சதவீதமாகும். இது கடந்த ஆண்டை விட 1.21 சதவீதம் அதிகமாகும்.