நாகை: நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குச் சட்டத்தின் படி, மீன்வளத் துறையினர் 11 குழுக்களாகப்பிரிந்து 545 விசைப் படகுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குச் சட்டத்தின் படி நாகை மாவட்டத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத அனைத்து விசைப்படகுகளும் இன்று ஆய்வு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, துணை இயக்குநர் பவானிசாகர், தர்மபுரி உதவி இயக்குநர் கோகுலகிருஷ்ணன் ஆகியோரது தலைமையில் நாகை, திருவாரூர், தர்மபுரி, மதுரை, திண்டுக்கல், சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீன்வளத் துறையினர் 11 குழுக்களாக நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர். ஒவ்வொரு குழுக்களில் இரண்டு அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த 11 குழுக்களும் நாகூர், நம்பியார்நகர், அக்கரைப்பேட்டை, வேதாரண்யம், ஆற்காட்டுத் துறை பகுதிகளில் உள்ள மீனவர்களின் 545 விசைப்படகுகளை நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆய்வில் படகு உரிமையாளர்கள், படகுகளின் பதிவுச் சான்று, மீன்பிடி உரிமம், படகு காப்பீட்டு உரிமம் மற்றும் வரி விலக்கு அளிக்கப்பட்ட டீசல் பாஸ் புத்தகம் ஆகியவற்றையும் மீன்வளத்துறை குழுக்கள், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ள தொலைதொடர்பு கருவிகள், பாதுகாப்பு கருவிகளையும் மீன்வளத்துறையினர் ஆய்வு செய்கின்றனர்.
ஆய்வில் காண்பிக்கப்படாத விசைப்படகுகள், மற்றும் பதிவு சான்று ரத்து செய்யப்பட்ட படகுகளின் விவரம் ஆய்வின் இறுதியில் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.