விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த நிலையில், இந்த வழக்கில் கைதான 11 பேரை 3 நாள்கள் நீதிமன்றக் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க விசாரிக்க விழுப்புரம் நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியது.
எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 14 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கை மரக்காணம் போலீஸார் விசாரித்து, சாராய வியாபாரிகளான மரக்காணத்தைச் சேர்ந்த அமரன், ஆறுமுகம், முத்து, ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன், சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் வழங்கிய புதுச்சேரி ராஜா என்கிற பர்கத்துல்லா, தட்டாஞ்சாவடி ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளையநம்பி, சென்னையிலிருந்து மெத்தனாலை கடத்தி வந்த வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ராபர்ட், வானூர் பெரம்பை பகுதியைச் சேர்ந்த பிரபு ஆகிய 11 பேரைக் கைது செய்தனர்.
இந்நிலையில் வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், விசாரணை அலுவலராக ஏடிஎஸ்பி கோமதி நியமிக்கப்பட்டார். தொடர்ந்து எக்கியார்குப்பம் கிராமத்தில் மீனவக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் சிபிசிஐடி போலீஸார் விசார ணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட 11 பேரையும் 3 நாள்கள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் செவ்வாய்க்கிழமை மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வழக்கில் கைதான 11 பேரையும் சிபிசிஐடி போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். யாரேனுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதா, யாரேனும் மனநலன் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா என விசாரித்த, நீதிபதி எம்.புஷ்பராணி, 11 பேரையும் 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். வெள்ளிக்கிழமை (மே 26) மாலை 5 மணிக்கு அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து சிபிசிஐடி போலீஸார், 11 பேரையும் பலத்த பாதுகாப்புடன் விழுப்புரம் காகுப்பம் பகுதியிலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்துக்கு அழைத்துச் சென்றனர். இவர்களிடம் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.