ஜப்பானின் ஒசாகாவில் இருந்து டோக்கியோ நகருக்கு புல்லட் ரயிலில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணித்தார்.
பெருமளவில் அன்னிய முதலீட்டை ஈர்க்கும் வகையில் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை தமிழக அரசு நடத்த உள்ளது.
இந்த முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்குமாறும், தமிழத்தில் தொழில் தொடங்குமாறும் கோரிக்கைகள் பல நாடுகளுக்கு விடுக்கப்பட உள்ளன. நேரடியாக சில நாடுகளுக்குச் சென்று அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்குமாறு கோரிக்கை விடுக்க முதல்வர் முடிவு செய்துள்ளார். இதன் ஒரு பகுதியாக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணிநேரத்திற்குள் அடைந்துவிடுவோம்.
உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்; ஏழை - எளிய - நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும்! என்று அதில் கூறியுள்ளார்.