கோவையில் மயில்கள் தொடர் உயிரிழப்பு: வன ஆர்வலர்கள் அதிர்ச்சி!

கோவை மாவட்டத்தில், தேசிய பறவையான மயில் தொடர்ந்து உயிரிழந்து வரும் சம்பவம் வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
கோவை ராகவேந்திரா நகர் பகுதியில் இறந்த நிலையில் கிடந்த மயில்.
கோவை ராகவேந்திரா நகர் பகுதியில் இறந்த நிலையில் கிடந்த மயில்.


கோவை: கோவை மாவட்டத்தில், தேசிய பறவையான மயில் தொடர்ந்து உயிரிழந்து வரும் சம்பவம் வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்தில் விவசாயிகள் மயில்களால் பயிர்கள் சேதம் அடைவதாகவும் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். மேலும், சில விவசாயிகள் சட்ட விரோதமாக பயிர்களை சேதப்படுத்தும் பறவைகள், காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகளுக்கு நாட்டு வெடி, விஷம் வைத்து கொன்று வந்தனர். அவர்கள் மீது வனத்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருவதை அடுத்து தற்பொழுது விவசாயிகள் கோரிக்கை மட்டுமே விடுத்து வருகின்றனர். 

சாலையில் இறந்து கிடக்கும் மயில். 

மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் உணவுக்காக மயிலை வேட்டையாடிய சம்பவமும் அரங்கேறியது. மருத்துவ குணம் கொண்ட எண்ணெய் தயாரிப்பதற்காக மயில்கள் வேட்டையாடி அழிக்கப்பட்டு வந்தது. தற்பொழுது வனத் துறையினரின் தீவிர நடவடிக்கையால் அதுபோன்ற குற்றங்கள் குறைந்து வருகின்றது என்றாலும் வனவிலங்குகள் அவ்வப்போது உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்தே வருகிறது.

இந்நிலையில், கோவை தடாகம் சாலையில் உள்ள குன்று பெருமாள் கோவில் அடுத்துள்ள ராகவேந்திரா நகர் பகுதியில் இறந்த நிலையில் மயில் ஒன்று கிடந்தது. இதனை அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர் இதுகுறித்து புகைப்படத்துடன் தகவல் கொடுத்தார். 

தகவல் பேரில் அங்கு வந்த வனத் துறையினர் அந்த மயிலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். 

மின்சாரம் தாக்கி உயிரிழந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மயிலின் கழுத்தில் காயம் இருப்பது தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com