சென்னை: தமிழ்நாட்டில் கனமழை காரணமாக, சென்னை, மதுரை, தேனி திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் சனிக்கிழமை (நவ.4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதனிடையே, இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதேபோன்று தெற்கு வங்கக்கடல் பகுதியிலும் ஒரு வளிமண்டல கீழக்கு சுழற்சி நிலவி வருகின்றது. இதன்காரணமாக தமிழகம், கேரளம், புதுச்சேரியில் சனிக்கிழமை கன முதல் மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதேசமயம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சனிக்கிழமை (நவம்பர் 4) தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை (நவ.4) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோன்று மதுரை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.