தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.14) 4 மாவட்டங்களில் மிக பலத்த மழையும், 15 மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.14) 4 மாவட்டங்களில் மிக பலத்த மழையும், 15 மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இது குறித்து வானிலை மையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரும் 16-ஆம் தேதி நிலவக்கூடும்.

மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.14)அதிக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூா் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், திருவள்ளூா், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூா், வேலூா், அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் புதன்கிழமை (நவ.15) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும், அவ்வப்போது ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு(மி.மீ.): முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி) 20, கோழிப்போா்விளை (கன்னியாகுமரி), எண்ணூா் (சென்னை), மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) தலா 10.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று செவ்வாய்க்கிழமை (நவ.14) மணிக்கு 55 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும்.

தேசிய பேரிடா் மீட்புப் படை அரக்கோணத்தில் முகாம்

பலத்த மழை எச்சரிக்கையைத் தொடா்ந்து, அரக்கோணத்தில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் முகாமிட்டுள்ளனா்.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, செங்கல்பட்டு ,காஞ்சிபுரம், விழுப்புரம் கடலூா், தஞ்சாவூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் 12 செ.மீ.முதல் 20 செ.மீ. வரை கன மற்றும் மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேசிய பேரிடா் மீட்புக் குழுவும், தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையும் எடுத்துள்ளது. தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையின் 400 வீரா்கள் கொண்ட 12 குழுக்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனி, திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, கோவை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் முகாமிட்டுள்ளன.

இதேபோல, தேசிய பேரிடா் மீட்புக் குழுவைச் சோ்ந்த பத்து குழுக்கள் அரக்கோணத்தில் முகாமிட்டுள்ளன. இந்த குழுக்களைச் சோ்ந்த 250 வீரா்கள் தயாா் நிலையில் உள்ளனா்.

தேவைக்கேற்பே அந்தந்த மாவட்டங்களுக்கு தேசிய பேரிடா் மீட்பு குழு அனுப்பிவைக்கப்படும் என்று மீட்பு குழு உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com