விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் முதலிடம் பிடித்துள்ள தொடர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் இல்லத்தரசிகளை மட்டுமின்றி இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களையும் கவரும் வகையில் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
அந்தத் தொடர்களில் நடித்துவரும் நடிகர் - நடிகைகளுக்கு சினிமா பிரபலங்களுக்கு ஈடாக ரசிகர் கூட்டமும் உருவாகியுள்ளன.
அவர்கள் தங்கள் ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் கேள்வி - பதில்கள் மூலம் உரையாடுவது, அடிக்கடி புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதும் ஒரு காரணம்.
விஜய் தொலைக்காட்சியில் யாரும் எதிர்பாராத வகையில், சிறகடிக்க ஆசை தொடர் அந்தத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் அதிக டிஆர்பி பெற்று முதன்மைத் தொடராக மாறியுள்ளது.
தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த நாயகி, குடிப்பழக்கம் கொண்ட ஓட்டுநரை (நாயகன்) எதிர்பாராத விதமாக திருமணம் செய்துகொள்கிறார். அந்தத் திருமணத்துக்குப் பிறகு இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, புற அழுத்தங்களை சமாளிப்பதே சிறகடிக்க ஆசை தொடரின் கரு.
பல தொடர்கள் சின்னத்திரை முன்னணி நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்டாலும், பெரிதாக அறிமுகமில்லாத இரு நட்சத்திரங்கள் முதன்மை பாத்திரத்தில் நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்துள்ளனர்.
இதில், கோமதி பிரியா நாயகியாகவும் வெற்றி வசந்த் நாயகனாகவும் நடிக்கின்றனர். எஸ்.குமரன் இந்தத் தொடரை இயக்குகிறார். சன் தொலைக்காட்சியில் மாபெரும் வெற்றி அடைந்த திருமதி செல்வம் தொடரை இயக்கியவர்.
சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் தொடர் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருவதைப்போல விஜய் தொலைக்காட்சியில் சிறகடிக்க ஆசை தொடர் உள்ளது. கடந்த மூன்று வாரங்களாக சிறகடிக்க ஆசை தொடர் முதலிடத்தில் உள்ளது.