விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் பார்க் வெளியிடும் டிஆர்பி பட்டியலில் முதல் 5 இடங்களில் ஒன்றாக முன்னேறியதும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்தான்.
கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
அண்ணன் - தம்பிகள் 4 பேர் மற்றும் அவர்களின் மனைவி மற்றும் உறவுகளைச் சுற்றி நடக்கும் கதைக்களம் பாண்டியன் ஸ்டோர்ஸின் மையக்கரு.
இந்தத் தொடரில் முல்லை பாத்திரத்தில் நடித்துவந்த வி.ஜே. சித்ரா உள்பட பல முதன்மை பாத்திரங்கள் மாறியுள்ளன. நெடுந்தொடர்களில் இருக்கும் பெரிய சவால், தொடரின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே கதாபாத்திரத்தை நடிக்கவைப்பது. பல தனிப்பட்ட காரணங்களால் அவ்வாறு செய்ய முடிமால் போவது தவிர்க்க முடியாதது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கரான். வெங்கட் உள்ளிட்ட பலர் முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தத் தொடரில் நடித்துவந்த சரவணன் விக்ரம் தற்போது பிக் பாஸ் -7 நிகழ்ச்சியில் போட்டியாளராக சென்றுள்ளார்.
இந்தத் தொடர் அக்டோபர் தொடக்க வாரத்தில் ஆயிரத்து 325 எபிஸோடுகளை நிறைவு செய்து ஒளிபரப்பாகி வருகிறது. இதன்மூலம் 5 ஆண்டுகளை பாண்டியன் ஸ்டோர்ஸ் வெற்றிகரமாகக் கடந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஆயிரம் எபிஸோடுகளைக் கடந்து ஒளிபரப்பான முதல் தொடரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்தான். டிஆர்பி பட்டியலில் முதல் 5 இடங்களில் ஒன்றாக முன்னேறியதும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.