நாமக்கல்: மூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை; கணவர் படுகாயம்

பரமத்தி வேலூர் அருகே தோட்டத்தில் இருந்த மூதாட்டி கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட நிலையில், அவரது கணவர் படுகாயமடைந்துள்ளார்.
நாமக்கல்: மூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை; கணவர் படுகாயம்
Updated on
1 min read


நாமக்கல்:  பரமத்தி வேலூர் அருகே தோட்டத்தில் இருந்த மூதாட்டி கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட நிலையில், அவரது கணவர் படுகாயமடைந்துள்ளார்.

பரமத்தி வேலூர் அருகே உள்ள குச்சிகாடு தோட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் (70). இவர் மோகனூர் சர்க்கரை ஆலையில் காவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி நல்லம்மாள் (65). இவர்களுக்கு கீதா, கோமதி, யமுனா என்ற மூன்று மகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.

இந்த நிலையில், சண்முகமும் அவரது மனைவி நல்லம்மாளும் குச்சிக்காடு தோட்டத்தில் தனியாக வசித்து வந்தனர். அடுத்த மாதம் தனது மூத்த மகளின் பேத்தி சிவானிக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் வைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சண்முகத்தின் வீட்டிற்கு முன்பும், பாதையிலும் மர்ம நபர்கள் மிளகாய் பொடியை தூவிவிட்டு, பின்புறம் இருந்த தண்ணீர் குழாயை உடைத்து விட்டு சென்றுள்ளனர்.  இது குறித்து பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த சண்முகம், பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில் புதன்கிழமை இரவு சண்முகத்தின் வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள், வீட்டிற்கு முன்பு இருந்த மரத்தில் ஏறி மாடிக்கு சென்று படிகட்டு வழியாக உள்ளே சென்றுள்ளனர். அங்கு தூங்கிக் கொண்டிருந்த நல்லம்மாளின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். சண்முகத்தை கடுமையாக தாக்கியுள்ளனர்.

வியாழக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் சண்முகம், நல்லம்மாள் வீட்டைவிட்டு யாரும் வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில், வீட்டிற்குள் இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.

பரமத்தி வேலூர் காவலர்களுக்கு தகவல் அளித்த நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள் நல்லாம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், உயிருக்கு போராடிய சண்முகத்தை மீட்டு நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், காவல் துணை கண்காணிப்பாளர் ராஜமுரளி மற்றும் போலீசார் கொலை நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும், கைரேகைகளை பதிவு செய்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com