தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது: “அமைச்சர் உதயநிதி மேடையில் முட்டையை எல்லாம் காண்பித்து பேசுகிறார். அதற்கு முன்பாக அவர் தேர்தலின்போது கூறிய நீட் ரகசியத்தை மக்களிடம் கூறவேண்டும்.
ஏதாவது ஒரு குழந்தை நீட் தேர்வுக்கு எதிராக இருக்கிறதா? யாருமே நீட் தேர்வுக்கு எதிராக இல்லை. ஆனால் திமுக 2016 முதல் நீட்டை வைத்து அரசியல் செய்து வருகிறது. மாணவர்களின் உணர்ச்சியைத் தூண்டி, அதன்மூலம் அரசியல் ஆதாயம் அடைந்து வருகிறது.
அரசியலைப் பொறுத்தவரை ஒரு கட்சியில் இரண்டு விதத்தில் வளர்ச்சி ஏற்படும். பாஜக வளர்ச்சி அடைந்து கொண்டு வருகிறது. எப்படி சீப்பை ஒழித்து வைப்பதால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியாதோ அதைப்போல ஒரு கொடிக் கம்பத்தை அகற்றுவதால் பாஜகவின் வளர்ச்சியைத் தடுத்து விடமுடியாது.
தேர்தல் நெருங்கி வருவதால் மக்களை ஏமாற்றுவதற்கு கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளனர் திமுகவினர். இந்த இயக்கத்தினால் எந்தப் பயனும் இல்லை.
ஒரு முட்டையைக் கொண்டுவந்து 'நீட்'டுக்கான ரகசியம் என உதயநிதி சொல்கிறார். மக்கள் பணி செய்வதை விடுத்து நகைச்சுவை செய்து கொண்டிருக்கிறார் உதயநிதி.
தமிழக மக்கள் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டுள்ளனர். உதயநிதி போன்றவர்கள் அவர்களும் படிக்கவில்லை. அவர்களைப் போலவே குழந்தைகளும் படிக்கக் கூடாது என நினைக்கின்றனர்.” என்று அண்ணாமலை பேசினார்.