25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

பொன்முடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜராக உத்தரவு

செம்மண் குவாரி முறைகேடு தொடர்பான அமைச்சர் க.பொன்முடி வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செப்.25-இல் ஆஜராக விழுப்புரம் நீதிமன்றத்தில்  உத்தரவிட்டுள்ளது.

Published On :2 பிப்ரவரி 2024, 8:28 am IST

விழுப்புரம்: செம்மண் குவாரி முறைகேடு தொடர்பான அமைச்சர் க.பொன்முடி வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செப்.25-இல் ஆஜராக விழுப்புரம் நீதிமன்றத்தில்  உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்டோர் மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணையில் அரசுத் தரப்பு சாட்சிகள் தொடர்ந்து பிறழ் சாட்சியமளித்து வந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் அனுமதிக் கோரி,  முன்னாள் அதிமுக  அமைச்சர் டி.ஜெயக்குமார் விழுப்புரம் நீதிமன்றத்தில் கடந்த 8-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் செப்.25-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி, கூடுதலாக கனிமவளத்துறையையும் கவனித்து வந்தார். இந்த ஆட்சிக்காலத்தில் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக அமைச்சர் க.பொன்முடி, அவரது மகனும், கள்ளக்குறிச்சி எம்.பியுமான பொன்.கெளதமசிகாமணி, ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு காவல் துறையினர் கடந்த 2012-ஆம்  ஆண்டில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையின் போது லோகநாதன் இறந்து விட்டார்.
 
இந்த வழக்கில்  அரசுத் தரப்பு சாட்சிகளாக மொத்தம் 67 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை வரை (செப்.7) வரை மொத்தம் 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் 9 பேர் அரசுத் தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியமளித்துள்ளனர்.

ஓய்வு பெற்ற வானூர் வட்டாட்சியர் குமாரபாலன், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமாரன்,  கிராம உதவியாளர்கள் பூத்துறை ரமேஷ், கோபாலகண்ணன், நில அளவைத்துறை முன்னாள் துணை ஆய்வாளர் நாராயணன், கனிமவளத்துறை முன்னாள் துணை இயக்குநர் சுந்தரம், ஓய்வுபெற்ற வட்டாட்சியர் மாணிக்கம், ஓய்வுபெற்ற நில அளவையர் அண்ணாமலை, எம்.பி. பொன். கௌதமசிகாமணிக்கு நிலத்தை குத்தகைக்கு தந்த புதுச்சேரி அய்யங்குட்டிப்பாளையத்தைச் சேர்ந்த பாஸ்கர் ஆகிய 9 பேர் அரசுத் தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியமளித்தனர். புவியியல் மற்றும் சுரங்கத்துறை முன்னாள் துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, கனிமவளத்துறை முன்னாள் துணை இயக்குநர் கண்ணன் மட்டும் தங்கள் சாட்சியத்தை பதிவு செய்தனர்.

முன்னாள் அமைச்சர் மனுதாக்கல்: 

இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டவர்கள் தொடர்ந்து பிறழ் சாட்சியமாக மாறி வருவதால், வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் அனுமதிக் கோரி முன்னாள் அதிமுக அமைச்சர் டி.ஜெயக்குமார் சார்பில் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் அரசு வழக்குரைஞர் சீனிவாசன் இந்த மனுவை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை  அளித்தார்.

அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்குப் பதிவு செய்யப்படும்போது பொன்முடி ஆட்சியிலும், அதிகாரத்திலும் இல்லாத நிலையில் முறையாக விசாரணை நடைபெற்று, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் உண்மை நிலவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்நிலையில் 2021-இல் திமுக ஆட்சியில் அமைச்சர் பொன்முடி இடம் பெற்ற பிறகு, இந்த வழக்கு விசாரணை வேகம்பெற்றதோடு, அரசுத் தரப்பு சாட்சிகள் தொடர்ந்து பிறழ் சாட்சியமளித்து வருகின்றனர். அரசு அதிகாரத்தில் இருப்பவருக்கு எதிராக அலுவலர்கள் எப்படி சாட்சியமளிக்க முடியும். நேர்மையான முறையில் அவர்கள் சாட்சியமளிக்க முடியாது. 

எனவே நீதிமன்றம் இதை கருத்தில் கொண்டு முறையாக விசாரணை நடத்த வேண்டும். மேலும் அரசுத் தரப்புக்கு உதவியாக விசாரணை நடத்த எங்களுக்கும் அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் ஜெயக்குமார் தரப்பில் தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து இந்த மனு மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அப்போது மனுவை ஏற்றுக் கொண்ட முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.பூர்ணிமா, செப்.25-ஆம் தேதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.