
கோப்புப்படம்
சென்னை: வரும் மக்களவைத் தேர்தல் கூட்டணியை இறுதி செய்வது குறித்து விவாதிக்க பாஜக நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை(செப்.14) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தில்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவை வலுவுடன் எதிா்கொள்ளும் நோக்கில், காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் ஒருங்கிணைந்து, ‘இந்தியா’ என்ற கூட்டணியின்கீழ் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக பாஜக தலைமை தீவிரமாக களப்பணியை முடுக்கிவிட்டு வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணயில் அங்கீகரிக்கும் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது.
இதற்காக, தில்லியில் நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | புதுக்கோட்டையில் இரண்டாம் நாளாகத் தொடரும் அமலாக்கத் துறையினா் சோதனை!
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் கூட்டணியை இறுதி செய்வது குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில், அதிமுக சார்பில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்க உள்ளார்.
இதற்காக, அவர் வியாழக்கிழமை(செப்.14) சென்னையில் இருந்து விமானம் மூலம் தில்லி புறப்பட்டு செல்கிறார்.
நாளை மாலை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் எடப்பாடி கே.பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...