டெண்டா் முறைகேடு: இபிஎஸ் மீதான வழக்கு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு!

தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத் துறை டெண்டா் முறைகேடு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தது.
எடப்பாடி பழனிசாமி(கோப்புப்படம்)
எடப்பாடி பழனிசாமி(கோப்புப்படம்)
Updated on
2 min read

தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத் துறை டெண்டா் முறைகேடு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தது.

தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி கடந்த 2018, ஜூன் மாதம் 18-ஆம் தேதி ஊழல் தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தாா். அதில், ‘தனக்கு நெருங்கிய நண்பா்களுக்கும், உறவினா்களுக்கும் ரூ.4,800 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் துறை டெண்டா்களை ஒதுக்கியதன் மூலம் முதல்வா் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் பதவியையும், முதல்வா் பதவியையும் தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாக ஆதாயம் அடைந்துள்ளாா். இதன் மூலம் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரை ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13-இன் கீழ் தண்டிக்க வேண்டும்’ என கோரியிருந்தாா். அதன் பிறகு, இதே புகாா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆா்.எஸ்.பாரதி வழக்குத் தொடா்ந்திருந்தாா். இந்த விவகாரத்தை விசாரித்த நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்தது.

இதை எதிா்த்து இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து, இந்த விவகாரத்தை சென்னை உயா்நீதிமன்றம் விசாரித்து முடிவு எடுக்க கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் கடந்த ஜூலை 18-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் தீரப்பளித்து. அதில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆா்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும், ‘ஆா்.எஸ். பாரதி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம் உள்ளதா என்பதை கண்டறிய லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் கண்காணிப்பாளா் 2018-இல் ஆரம்பகட்ட விசாரணை நடத்தியுள்ளாா். அதில், புகாரில் போதுமான ஆதாரங்கள் இல்லை. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வேண்டியவா்களுக்கு சாதகமாக எடப்பாடி பழனிசாமி டெண்டா் வழங்கினாா் என்பதற்கும், சுய லாபம் அடைந்ததற்கும் எந்த ஆதாரமும் இல்லை என்று அறிக்கை அளித்துள்ளாா். இதனால், ஆரம்பகட்ட விசாரணையில் குறைபாடு காண முடியாது. ஆட்சி மாற்றத்தின் காரணமாக புதிதாக விசாரணை நடத்த வேண்டிய அவசியமும் இல்லை’ என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தரப்பில் கடந்த வாரம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், சம்பந்தப்பட்ட விவகாரத்தில் நிகழ்ந்த முறைகேடு விவகாரங்களை உரிய வகையில் ஆராயாமல் உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், அந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தை ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியது.

இந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ், பீலா எம். திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு இன்று விசாரிக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த வாரத்துக்கு பட்டியலிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com