
புதுக்கோட்டை: பள்ளி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை மாணவரின் உறவினர்களும் இந்திய மாணவர் சங்கத்தினரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை அருகே விஜயபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் மாதேஸ்வரன் (17). இவர், புதுக்கோட்டை மச்சுவாடியில் உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
திங்கள்கிழமை காலை பள்ளிக்கு வந்த மாணவர் மாதேஸ்வரன் மாலையில் வீடு திரும்பவில்லை. இது குறித்து குடும்பத்தினர் மாதேஸ்வரனை தேடிய நிலையில், திங்கள்கிழமை இரவு பள்ளியின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கணேஷ் நகர் காவல் நிலையத்தினர் சடலத்தைக் கைப்பற்றி, இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவரின் சடலம் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ள, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே மாணவரின் உறவினர்களும், இந்திய மாணவர் சங்கத்தினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி!
வழக்குப் பதிவு செய்து முறையான விசாரணை நடத்தப்படும் என காவல் துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...