கச்சத்தீவு குறித்து பேசும் பிரதமர் நரேந்திர மோடி, அருணாச்சல் விவகாரத்தில் சீனாவின் நடவடிக்கை குறித்து ஏன் வாய் திறக்கவில்லை என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலூர் கதிர்ஆனந்த், அரக்கோணம் ஜெகத்ரட்சகனை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மக்கள் விரோத சட்டங்களை பாஜக கொண்டுவரும்போது எடப்பாடி பழனிசாமி என்ன செய்துகொண்டிருந்தார். பழனிசாமி தற்போது சிறுபான்மையினர் மீது திடீர் பாசம் காட்டி வருகிறார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக வாக்களித்தபோது, சிறுபான்மையினருக்கு அதிமுக அமைதியாக இருந்து துரோகம் செய்துகொண்டிருந்தது.
மாநில நிதியை தராத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்றத்தை நாடியுள்ளது. எதிர்க்கட்சிகள் மீது அமலாக்கத் துறை, வருமானவரித் துறையை மோடி அரசு ஏவி விடுகிறது.
அரசியல் லாபத்துக்காக தற்போது கச்சத்தீவு பற்றி பாஜகவினர் பேசி வருகின்றனர். வெளியுறவுத் துறை செயலாளராக இருந்தபோது கச்சத்தீவை இலங்கைக்குச் சேர்ந்தது என்றவர் ஜெய்சங்கர். கச்சத்தீவு பற்றி பேசும் மோடி, அருணாசலப் பிரதேசத்தில் 30 இடங்களுக்கு மேல் சீனா பெயர் சூட்டியுள்ளது குறித்து பிரதமர் மோடி ஏன் வாய் திறக்கவில்லை என மு.க. ஸ்டாலின் பேசினார்.