தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (50). விவசாயியான இவர் இறால் பண்ணையும் நடத்தி வருகிறார்.
இவரது உறவினரான அய்யம்பேட்டை அருகேயுள்ள பசுபதிகோவிலைச் சேர்ந்த செந்திலுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே ஒரு வாரத்துக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.
இது குறித்து அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் செந்தில் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், செந்தில், ஜெயக்குமார், இவரது நண்பரான காட்டுக்குறிச்சியைச் சேர்ந்த பிரவீன் (28) ஆகியோர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு புகார் கொடுப்பதற்காக நேற்று சென்றுள்ளனர். அங்கு அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்யுமாறு கூறியுள்ளனர்.
இதையடுத்து, ஜெயக்குமார், செந்தில், பிரவீன் ஆகியோர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து அய்யம்பேட்டை காவல் நிலையத்துக்கு நேற்று மாலை சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பசுபதிகோவில் அருகே சென்றபோது சிலர் காரை வழிமறித்து ஜெயக்குமார், செந்தில், பிரவீன் ஆகியோரை ஆயுதங்களால் தாக்கினர்.
இதனால், பலத்த காயமடைந்த ஜெயக்குமார், பிரவீன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் ஜெயக்குமார் உயிரிழந்தார். பிரவீன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அய்யம்பேட்டை காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.