தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாள்கள் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகின்ற 19-ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரசாரமும் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வருகின்ற 9, 10, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி தமிழகத்தில் பிரசாரம் செய்யவுள்ளார்.
வேலூருக்கு 9-ஆம் தேதி வருகை தரும் மோடி, கூட்டணிக் கட்சியை சேர்ந்த ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து சாலைப் பேரணியில் ஈடுபடவுள்ளார். தொடர்ந்து, தென் சென்னையில் தமிழிசை செளந்தரராஜனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
ஏப்ரல் 10-ஆம் தேதி நீலகிரி செல்லும் பிரதமர், மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு ஆதரவாக பேரணியாக சென்று வாக்கு சேகரிக்கவுள்ளார்.
அன்றைய தினமே கோவையில் மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
இரண்டாம் கட்டமாக மீண்டும் ஏப்ரல் 13-ஆம் தேதி பெரம்பலூர் வரும் மோடி, பாரிவேந்தரை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
ஏப்ரல் 14-ஆம் தேதி விருதுநகரில் நடிகை ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.