தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள்தான் பிரசாரத்தில் ஈடுபட வேண்டுமென்றில்லை, தேர்லில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூட பிரசாரம் செய்யலாம் என்பதை நிரூபித்திருக்கிறது இந்த மக்களவைத் தேர்தல்.
நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
கோடை வெப்பத்தோடு, அரசியல் கட்சிகளின் பிரசாரமும் சூடுபிடித்திருக்கும் நிலையில், மறுபக்கம் வாக்குப்பதிவு விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற முனைப்பில் மாநில தேர்தல் ஆணையமும் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மக்களைக் கவரும் வகையில் பல்வேறு விடியோக்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்புவது, கல்லூரிகளில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்துவது என பல்வேறு முறையில் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், தற்போது தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தானே பாடி ஒரு விழிப்புணர்வு விடியோவை உருவாக்கியுள்ளார். தேர்தல் விழிப்புணர்வு விடியோவில், உன் உரிமை காத்திடும் வயதிது, உன் கடமை செய்திடும் நேரமிது என்று வரிகள் அமைந்துள்ளன.