'உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களும் பழனிசாமியை நம்பத் தயாராக இல்லை'

'உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களும் பழனிசாமியை நம்பத் தயாராக இல்லை'

உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களும் பழனிசாமியை நம்பத் தயாராக இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டியில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது, நான் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடனே… ஒவ்வொரு துறையாக ஆய்வு செய்தேன்… அந்தக் கோப்புகளைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது… அறிவிப்புகளை வெளியிட்டதுடன் சரி… அந்த அறிவிப்புகளுக்கான அரசாணைகூட போடாமல் விட்டுவிட்டு சென்றிருந்தார் பழனிசாமி!

அ.தி.மு.க. ஆட்சியில் சீரழிந்த நிர்வாகத்தைச் சீர்திருத்த, பல அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதாயிற்று! கோட்டையில் இருந்து மட்டும் ஆய்வுக் கூட்டங்களை நடத்தினால் போதாது – ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்படி, மாவட்டந்தோறும் ஆய்வுகளை நடத்தினேன்.

இது ஒருபக்கம் என்றால், அரசு கஜானாவைத் தூர்வாரிவிட்டார். நிதிநிலைமையைச் சரி செய்யவே ஒரு கமிட்டி போட்டேன்… அதுவும் சாதாரண கமிட்டி இல்லை… இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில், பொருளாதார அறிஞர்களின் குழுவை அமைத்தேன். இப்படியெல்லாம், அடுத்தடுத்து பல தொடர் நடவடிக்கைகளை எடுத்து - ஆய்வுகளை செய்து – பழனிசாமியின் நிர்வாகச் சீர்கேட்டைக் களைந்து, இன்று மற்ற மாநிலங்கள் மட்டுமல்ல – உலக நாடுகள் பலவும் கவனிக்கும் - சாதனைகளை செய்துகொண்டு இருக்கிறோம்.

பழனிசாமி தமிழ்நாட்டை மட்டும் அடகு வைக்கவில்லை; அ.தி.மு.க.வையும் சேர்த்துதான் அடகு வைத்திருக்கிறார். அதனால், தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல - உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களும் பழனிசாமியை நம்பத் தயாராக இல்லை! இதுவரை நடந்த தேர்தல்களில் எல்லாம் தோற்ற பழனிசாமி, இந்தத் தேர்தலிலும் தோற்கத்தான் போகிறார். ஆனால், இப்போதுகூட, பா.ஜ.க.வின் கள்ளக்கூட்டணி வைத்துக்கொண்டு, கூட்டணி இல்லை என்று விழுந்து புரண்டு நடிக்கிறார். உங்கள் நடிப்பு ஒருபோதும் எடுபடாது பழனிசாமி.

நேற்று செய்திகளில் பிரதமர் வருகையைப் பற்றிப் பார்த்திருப்பீர்கள். தமிழ்நாட்டை வெள்ளம் – புயல் தாக்கியபோது எட்டிக்கூட பார்க்காத மோடி– தமிழ்நாட்டிற்கான நிவாரண நிதி கொடுக்க மனம் வராத மோடி – தேர்தல் வருகிறது என்று ஏற்கனவே நான்கு முறை வந்தார். இப்போது இன்னும் நான்கு முறை வரப் போகிறாராம்! தமிழ்நாட்டு மக்களுக்குத் தமிழில் வணக்கம் சொன்னால்போதும்... வேட்டி கட்டினால்போதும்… இட்லி பிடிக்கும்… பொங்கல் பிடிக்கும் என்று சொன்னால்போதும் என்று நினைத்துக் கொண்டு வருகிறார் பிரதமர் மோடி! மக்களுக்குத் தேவையான நேரத்தில் உதவி செய்பவர்களைத்தான் மக்கள் நினைத்துப் பார்ப்பார்கள். மக்களை மதிக்கவில்லை என்றால், அவர்களும் மதிக்க மாட்டார்கள்! மீண்டும் மீண்டும் நீங்கள் எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் தமிழ்நாட்டை பா.ஜ.க. கைப்பற்றவே முடியாது. இது பெரியார் மண்! பேரறிஞர் அண்ணாவின் மண்! தலைவர் கலைஞருடைய மண்! திமுக இருக்கும்வரை உங்கள் எண்ணம் பலிக்கவே பலிக்காது!

மக்களுக்கு நன்கு தெரியும். தமிழ்நாட்டின் பொற்காலம் என்பது, தி.மு.க. ஆட்சிதான்! தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் பெருகியது தி.மு.க. ஆட்சியில்தான்! தமிழ்நாட்டின் கல்வி அறிவு உயர்வுக்கு வித்திட்டது தி.மு.க. ஆட்சிதான்! தமிழ்நாட்டிற்கு எண்ணற்ற முத்திரைத் திட்டங்களை நிறைவேற்றியது தி.மு.க. ஆட்சியில்தான்! இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது தி.மு.க. ஆட்சிதான். மாவட்டந்தோறும் தொழிற்சாலைகளைக் கொண்டு வந்து வளர்ச்சிக்கு வழிவகுப்பதும் தி.மு.க. ஆட்சிதான்! இந்த திராவிட மாடல் ஆட்சி, தில்லியிலும் இந்தியா கூட்டணி மூலமாக எதிரொலிக்க வேண்டும். ஏன் என்றால், பா.ஜ.க. வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடு!

சமீபத்தில் ப.சிதம்பரம் ஒரு தொலைக்காட்சியில் அளித்த பேட்டியைப் பார்த்தேன், நீங்களும் பார்த்திருப்பீர்கள். பா.ஜ.க.வுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது என்று அவர் சொன்ன கருத்துகளை வழிமொழிந்து, நான் கூடுதலாகச் சொல்கிறேன்… பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்களித்தால், நாடெங்கும் மதவெறி ஊட்டப்பட்டு, எங்குப் பார்த்தாலும் மதக்கலவரம் என்ற நிலைமை உருவாகும். மக்களைப் பிளவுப்படுத்தி வேற்றுமைகளும் - அடிமைத்தனமும் நிறைந்த சமூகத்தை மீண்டும் உருவாக்க அரசியல்சட்டத்தை மாற்றுவார்கள். படிப்பதால்தான் இவர்கள் உரிமைகளைக் கேட்கிறார்கள் என்று கல்வியை நம்மிடம் இருந்து பறிப்பார்கள். மக்களைச் சிந்திக்க விடாமல் தடுக்க வரலாற்றை, பொய்களால் மாற்றி எழுதுவார்கள். மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து – மாநிலங்களை நகராட்சிகள் போன்று நடத்துவார்கள்… மாநிலங்களில் இருக்கும் மக்கள், சிறிய பிரச்னைக்குக்கூட ஒன்றிய அரசை எதிர்பார்த்து நிற்கும் நிலைமை உருவாகிவிடும்! மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, ஆளுநர்கள் மூலமாக செயல்படவிடாமல் தடுத்து, போட்டி அரசாங்கம் நடத்துவார்கள். சொந்தங்களாக வாழும் இஸ்லாமிய – கிறிஸ்துவர்களை, இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றி, அவர்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பார்கள். ஒரே நாடு – ஒரே கலாச்சாரம் – ஒரே மொழி – ஒரே மதம் – ஒரே தேர்தல் – ஒரே ரேஷன் கார்டு – ஒரே உணவு – ஒரே அரசு – ஒரே கட்சி – ஒரே தலைவர் என்று ஒரே ஒரே - என்று ஒரேயடியாக நாட்டை நாசமாக்கிவிடுவார்கள்! பா.ஜ.க.வின் திட்டங்கள் மிக மிக மோசமானது!

இந்த விடுதலைப் போரில் இந்திய மக்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், எதிரிகளை அடையாளம் காண்பது மட்டுமல்ல – துரோகிகளையும் சேர்த்தே அடையாளம் காண வேண்டும்! எதிரிகளையும் - துரோகிகளையும் விரட்டியடிக்க வேண்டும்! பா.ஜ.க.வுக்கு சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில் தக்க பாடம் புகட்ட வேண்டும்!

எனவே, தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க. – அதற்குத் துணைபோகும் பா.ம.க. - தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அ.தி.மு.க. – ஆகிய கட்சிகளை ஒருசேர வீழ்த்துங்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com