தமிழகத்தில் நாளை(ஏப். 7) முதல் 6 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று முன்னதாக சென்னை வானிலை அறிவித்து இருந்தது.
தமிழகத்தின் வட மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.7) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி வரை அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
இதனிடையே, தமிழகத்தில் சனிக்கிழமை 15 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் பதிவானது. அதிகபட்சமாக சேலத்தில் 106.7 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது குறிப்பிடத்தக்கது.