சென்னை: தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகாத்துடன் மோதல் ஒருபக்கமிருக்க, கோடை வெப்பம் தீவிரமடைந்து, குடிநீர் மற்றும் பாசன தேவைக்கான தண்ணீர் தேவையை பூர்த்திசெய்ய முடியாமல் மறுபக்கம் நீர்வளத்துறை திணறி வருகிறது.
அதாவது, மேட்டூரிலிருந்து தற்போது திறந்துவிடப்படும் 2,000 கன அடி வீதம் குடிநீரை ஏப்ரல் இறுதிக்குள் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் நாமக்கல், சேலம் திருச்சி மற்றும் டெல்டா பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரண்டரை வாரங்களுக்கு முன்பு மேட்டூர் அணையின் நீர் இருப்பு 34 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது கடும் கோடை வெப்பத்தால் 6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 90 நீர்த்தேக்கங்களில் மாநிலத்தின் மொத்த நீர் சேமிப்புத்திறன் 224 டிஎம்சி அடி என்ற நிலையில், வெறும் 61.554 டிஎம்சி அடியாக உள்ளது, இது வெறும் மொத்த கொள்ளளவில் 27.44 சதவீதமாகும்.
பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வற்றாத நீர் ஆதாரமாக இருந்து வந்த மேட்டூர் அணையில் ஒட்டுமொத்த நீர் இருப்பு அளவு 93.470 டிஎம்சி அடியாக இருக்கும்நிலையில் தற்போது வெறும் 23.320 டிஎம்சி அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. ஆனால், கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 68.386 டி.எம்.சி.அடி தண்ணீர் இருந்தது. இதனை கடந்தாண்டோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மேட்டூரில் நீர் இருப்பு கிட்டத்தட்ட 66 சதவீதம் குறைந்துள்ளது.
இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: குடிநீர் தேவைக்காக மேட்டூரில் இருந்து 2,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இருப்பினும், ஏப்ரல் இறுதிக்குள் தண்ணீர் திறப்பு குறைக்கப்படும் என்றார்.
மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவதால் ஜூன் மாதம் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை கூட ஏற்படும் என்கிறார்.
இதுகுறித்து திருவாரூரைச் சேர்ந்த விவசாயி கே.ரகுராமன் (45) எக்ஸ்பிரஸ் குழுமத்திடம் கூறும்போது, “ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறையால் சம்பா பருவ (செப்டம்பர்-டிசம்பர்) சாகுபடி, தாளடி (நவம்பர்-பிப்ரவரி) ஆகிய பருவங்களில் நஷ்டமடைந்துவிட்டோம். எனவே, குறுவைப் பருவத்திலாவது (ஜூன்-செப்டம்பர்) சாகுபடியை துவங்கலாம் என காத்திருக்கிறோம். ஆனால், மேட்டூரில் தண்ணீர் இல்லாததால், இந்த பருவத்தையும் இழக்க நேரிடுமோ என்று அச்சத்தில் உள்ளோம் என்கிறார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கே.பாலசுப்ரமணி கூறும்போது, “மேட்டூரில் தற்போது 25 சதவீத நீர் இருப்பு இருந்தாலும், டெல்டா மாவட்டங்களில் சாகுபடிப் பகுதிகளை பாதிக்கும் வகையில் மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக கிட்டத்தட்ட 10 சதவீதம் தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. குறுவை பருவத்தில், விவசாயிகள் வழக்கமாக மூன்று லட்சம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்வார்கள், ஆனால் இந்த ஆண்டு, அது சாத்தியமில்லை என்கிறார்.
நீர்வளத்துறையின் மற்றொரு மூத்த அதிகாரி கூறுகையில், “நடப்பு நீர் ஆண்டில் (ஜூன் 23 முதல் மே 24 வரை), ஏப்ரல் 4 ஆம் தேதிக்குள் தமிழகத்திற்கு 172.5833 டிஎம்சி அடியை கர்நாடகா வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், மாநிலத்திற்கு 78.3992 டிஎம்சி கனஅடி மட்டுமே கிடைத்துள்ளது.
புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், தமிழகம் 3.6 டி.எம்.சி.அடி தண்ணீரைத் திறக்க வலியுறுத்தியது, ஆனால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தமிழக கோரிக்கையை நிராகரித்துவிட்டு, காவிரிப் படுகையில் உள்ள நீர்த்தேக்கங்களில் உள்ள தண்ணீரை நியாயமான முறையில் பயன்படுத்துமாறு இரு மாநில அரசுகளையும் வலியுறுத்தியிருக்கிறது என்கிறார்.