தமிழகத்துக்கு கடந்த 10 ஆண்டுகளாக எந்தவொரு நலத்திட்டங்களையும் செய்யாத பிரதமர் நரேந்திர மோடி எந்த முகத்துடன் இங்கு வருகிறார் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன், சிவகங்கை தொகுதிவேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 9) பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தை மட்டுமல்ல. எந்த திட்டங்களையோ, உதவிகளையோ செய்யாத் பிரதமர் எந்த முகத்தோடு தமிழகம் வந்துள்ளார்? வாக்கு கேக்க மட்டும் மோடி வந்து செல்ல தமிழகம் என்ன சரணாலயமா? தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களா?
தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளம், கர்நாடகத்தையும் மோடி வஞ்சிக்கிறார்.
பெண் சக்தி பற்றி பேசும் மோடி, பெண்கள் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு சென்றாரா?
மல்யுத்த வீராங்கனைகள் கண்ணீர் விட்டபோது பிரதமர் மோடி என்ன செய்துகொண்டிருந்தார்?
விடியல் பயணம், நான் முதல்வர், புதுமைப்பெண் என்று திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு முதல்வர் பேசினார்.
ரூ.65 ஆயிரம் கோடியில் கல்விக் கடனை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
நாங்கள் மதத்திற்கு எதிரியல்ல, மக்களை பிளவுபடுத்துவோருக்குத்தான் எதிரி.
திமுக ஆட்சியில் 1,556 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது.
இந்திய நதிகளை இணைத்தாரா மோடி? குழாய் மூலம் கேஸ் இணைப்பு தந்தாரா?
அமலாக்கத் துறை, குற்றப் புலனாய்வுத் துறை வைத்து அரசியல் செய்கிறார் மோடி. அவருக்கு எதிராக பேசினாலே சோதனை வருகிறது எனக் குறிப்பிட்டார்.
பாஜகவின் இரண்டாவது அணியாக எடப்பாடி பழனிசாமி உள்ளார். பாஜக கூட்டணியிலிருந்து விலகியதாக நாடகமடுகிறார் எடப்பாடி பழனிசாமி.
தமிழுக்கும் தமிழகத்துக்கும் துரோகம் செய்யும் மோடியுடன் இபிஎஸ் கூட்டு வைத்துள்ளார்.
பன்னீர்செல்வம், தினகரன், சசிகலாவுக்கு துரோகம் புரிந்தவர் எடப்பாடி பழனிசாமி.
அத்தகையவர்களை அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும். ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையும் மதிக்கும் இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர் பிரதமராக ஆட்சியில் அமர வேண்டும் என மு.க. ஸ்டாலின் பேசினார்.