வேலூரில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பொதுக் கூட்டத்தில் பேசினார்.
பாஜக கூட்டணி சாா்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் (வேலூா்), கே.பாலு (அரக்கோணம்), செளமியா அன்புமணி (தருமபுரி), கே.எஸ்.நரசிம்மன் (கிருஷ்ணகிரி), அஸ்வத்தாமன் (திருவண்ணாமலை), கணேஷ்குமாா் (ஆரணி) ஆகிய 6 வேட்பாளா்களை ஆதரித்து பிரதமா் மோடி புதன்கிழமை காலை வேலூா் கோட்டை மைதானத்தில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தமிழல் வணக்கம் சொல்லி உரையை தொடங்கினார் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
மேலும், பிரதமர் மோடி பேசியது:
“வரலாற்று சிறப்புமிக்க துணிச்சல் மிக்க வேலூர் மக்களுக்கு வணக்கம். ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக வேலூரில் மிகப் பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது. வேலூர் மண் மீண்டும் ஒரு புரட்சி செய்ய இருக்கிறது. தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருகிறது. ஒட்டுமொத்த தமிழகமும் மீண்டும் மோடி அரசு வேண்டும் என சொல்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வளர்ச்சிக்கான அடித்தளத்தை போட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆட்சியில் பொருளாதார பின்னடைவுடன் இருந்தது. உலகம் முழுவதும் இந்தியாவில் மோசடி, பொருளாதார வீழ்ச்சி என கடந்த ஆட்சியில் பேசி வந்தது.
இந்திய வல்லரசாக மாறி வருகின்றது. தமிழகம் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. விஞ்ஞானத்தில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. தமிழர்களின் பெருமை இந்தியாவின் வளர்ச்சிக்கு வலு சேர்த்துள்ளது.
உதான் திட்டத்தின் கீழ் விரைவில் வேலூர் விமான நிலைய திட்டங்கள் முடிக்கப்பட்டு இந்தியாவின் முக்கிய விமான நிலையமாக உருவாகும்.
தமிழகத்தின் திமுக இன்னும் பழைய அரசியல், சிந்தனையுடன் உள்ளது. திமுக ஒரு குடும்பத்தின் சொத்தாக உள்ளது. குடும்ப அரசியல், ஊழல், தமிழ் கலாசாரத்தை எதிர்க்கும் சிந்தனையுடன் தமிழகத்தை பின்னோக்கி கொண்டு செல்கிறது திமுக.
ஊழலுக்கான முதல் காப்புரிமையை திமுக வைத்துள்ளது. கொள்ளையடிப்பது மட்டுமே திமுக குடும்பத்தின் வேலை. மணல் கொள்ளை மூலம் மட்டுமே ஒரு ஆண்டில் ரூ. 4,200 கோடி ஊழல். தமிழகத்துக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது.
பள்ளிக் கூடங்களில் போதைப் பொருள்கள் விற்கப்படுகிறது. போதைப் பொருள் கள்ளக் கடத்தல் செய்யப்பட்டு என்சிபியால் கைது செய்யப்பட்ட தலைவன் திமுகவின் பாதுகாப்பிலும், அவர்கள் குடும்பத்துடன் தொடர்பிலும் இருக்கிறார்.
தமிழ்நாட்டு மக்களை மொழி, சாதி, மதத்தின் பெயரில் பிரித்து ஆழ்ந்து வருகின்றனர். திமுகவின் மோசமான அரசியலை அம்பலப்படுத்துவேன்.
காங்கிரஸ் - திமுக போலியான முகத்தை நாட்டு மக்கள் அறிந்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது. தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே சென்றால் கைது செய்யப்படுகிறார்கள். தூக்கு தண்டனை பெற்ற 5 தமிழக மீனவர்களை நான் மீட்டுள்ளேன்.
ஹிந்து மதத்தின் பெண் சக்தியை அழிப்பேன் என்று காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தி பேசியுள்ளார். திமுகவும் சநாதானத்தை அழிப்பேன் என்று பேசியுள்ளது.
ஜெயலலிதாவை எப்படி நடத்தினார்கள் என்று நமக்கு தெரியும். திமுகவினர் இன்றும் பெண்களை இழிவுபடுத்தி வருகின்றனர். நாங்கள் பெண்களுக்கான மரியாதையை மீட்டுக் கொடுப்போம்.” எனத் தெரிவித்தார்.