சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் வருகை மற்றும் சரக்குகள் கையாளும் நிலை அதிகரித்து வருவதை கணக்கில் கொண்டு சென்னையின் 2-வது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ரூ.20,000 கோடி முதலீட்டில் 2028-ஆம் ஆண்டுக்குள் விமான நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்திருந்தனர்.
ஏகனாபுரம் கிராமத்தில் தபால் வாக்குகளும் இதுவரை ஏதும் பதிவாகவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து செய்தியாளர்களுடன் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, "தேர்தலை புறக்கணிக்கும் ஏகனாபுரம் கிராம மக்களுடன் மாவட்டத் தேர்தல் அதிகாரி பேச்சுவார்த்தை நடத்துவார்.
தேர்தலை புறக்கணிப்பதாக கூறும் மக்களிடம் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பேச்சுவார்த்தைக்கு பின்னரும் தேர்தலை புறக்கணித்தால் ஜனநாயக நாட்டில் ஒன்றும் செய்ய முடியாது" என்று தெரிவித்தார்.