
திருநெல்வேலி: திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு கரியமாணிக்கப் பெருமாள் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டுக்கான விழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து திருவிழா நாள்களில் சிறப்பு திருமஞ்சனமும், இரவில் அன்ன வாகனம், சிம்ம வாகனம், ஹனுமந்த வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம் உள்ளிட்டவற்றில் பெருமாள் மலர் அலங்காரத்துடன் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மலர் அலங்காரத்துடன் பெருமாள் தேருக்கு எழுந்தருளினார். கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு பானகரம், நீர்-மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
திருநெல்வேலி நகரம், சாலியர்தெரு, பழையபேட்டை, கண்டிகைப்பேரி, பேட்டை, கோடீஸ்வரன்நகர், தென்பத்து சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பா.போத்தி செல்வி, தக்கார் அய்யர் சிவமணி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.