சிதம்பரம்: சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் காட்டுமன்னார்கோயில் வீராணநல்லூரில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தனது பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கினார்.
தமிழ்நாடு முதல்வர் அம்பேத்கர் பிறந்தநாளில் உறுதிமொழி ஏற்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதை அடுத்து தொல். திருமாவளவன் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தமிழக அரசு வரையறுத்துள்ள உறுதிமொழியை ஏற்றார்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் எம்.ஆர்.கே.பி. கதிரவன், காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் ம.சிந்தனைசெல்வன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
பின்னர், நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசுகையில், "புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாளான்று அவர் வகுத்தளித்த அரசியலமைப்பு சட்டத்தையும், அவர் விரும்பிய சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டுமானால் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்" என்றார்.
பின்னர், திருமாவளவன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் நாட்டார்மங்கலம், பழஞ்சநல்லூர், கருணாகரநல்லூர், அறந்தாங்கி, மாமங்கலம், கொண்ட சமுத்திரம், வடக்கு பாளையம், சோழத்தரம் குமாரக்குடி, கானூர், நாச்சியார் பேட்டை, திருமுட்டம், கள்ளிப்பாடி ஆகிய பகுதிகளில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.