மக்களுக்கு நன்மை செய்யவே அடிக்கடி கூட்டணி மாறவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தருமபுரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அசோகனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 16) பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், ''அதிமுக பற்றி விமர்சிப்பதற்கு பாமகவுக்கு எந்தத் தகுதியும் இல்லை. அடிக்கடி கூட்டணி மாறிக்கொண்டே இருக்கும் கட்சி பாமக. அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே அதிமுக மீது குற்றம் சாட்டப்படுகிறது. நீட் தேர்வை கொண்டுவந்தவர்களுடன் பாமக தற்போது கூட்டணி வைத்துள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டேன், ஆட்சி மாற்றம் நடந்ததால் நடைமுறைக்கு வரவில்லை.
கரோனா காலகட்டத்தில் பணம் பிடித்தமின்றி அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கியது அதிமுக. கரோனாவைத் தடுப்பதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருந்தது. அதற்காக பிரதமரிடம் பாராட்டைப் பெற்றது அதிமுக அரசு.
மேட்டூரில் ரூ.26 கோடியில் பலம் கட்டிக்கொடுத்தது அதிமுக. தருமபுரி வறட்சியான பகுதி. காவிரியிலிருந்து எடுக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட குடிநீர் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் மக்கள் கோரிக்கைகளுக்காக யாருக்கும் அஞ்சாமல் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக கூட்டணி மாறவில்லை என எடப்பாடி பழனிசாமி பேசினார்.