57 ஆண்டுகளாகியும் முறியடிக்கப்படாத வாக்குப்பதிவு சதவிகிதம்!
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலின் இறுதி வாக்குப்பதிவு சதவீதம் 70%-க்கு அதிகமாக பதிவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 1967 மக்களவைத் தேர்தலின் போது பதிவான 76.56% வாக்குப்பதிவு சதவீதத்தை (76.56%) முறியடிக்க தமிழ்நாடு மீண்டும் தவறிவிட்டது.
கடந்த 1967 தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து திமுக அதிகாரத்தை கைப்பற்றிய வரலாற்று நிகழ்வு நடந்த தேர்தலில் அதிக வாக்கு சதவீதம் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது. 1965ல் நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் பின்னணியில் இத்தேர்தல் நடந்தது. இதில் திமுக முன்னிலையில் இருந்தது.
அப்போதிலிருந்து, எந்த ஒரு தேசியக் கட்சிகளுக்கு இடம் கொடுக்காமல் திராவிடக்கட்சிகள் இருதுருவ அரசியலை தமிழகத்தில் நடத்தி வருகின்றனர்.
1967-க்குப் பிறகு, 1984, 2009, 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் 70% ஐத் தாண்டியது. நிலையற்ற கூட்டணி அரசால் 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்து நடைபெற்ற பொதுத் தேர்தலில், வாக்குப்பதிவு 60% க்கும் குறைவாக இருந்தது.
தற்போதைய தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. வலுவாக காலூன்ற பிரதமர் நரேந்திர மோடி சுமார் 10 முறை தமிழகம் வந்து பா.ஜ.க.வுக்காக வாகனப் பேரணி, பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்தார்.
அதேபோல் மத்திய அமைச்சர்கள் ஏராளமானோர் தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும், வாக்குப்பதிவு குறைந்துள்ளது.
மேலும், 2019 மக்களவைத் தேர்தலை விட 35 தொகுதிகளில் குறைவான வாக்குப்பதிவும், கள்ளக்குறிச்சி, சேலம், கோயம்புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய நான்கு தொகுதிகள் முந்தைய மக்களவைத் தேர்தலை விட அதிக வாக்குகளும் பெற்றுள்ளதாக தற்காலிக வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கிறது.
ஆனால், சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்த வரையில், 2011 தேர்தலில் வாக்குப்பதிவு 78.12% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.