தென் கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் 3 மாதங்கள் மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் நாளை(ஏப். 23) சித்ரா பௌர்ணமி என்பதால் அதிகமான பக்தர்கள் வரக் கூடும் என்பதால் பக்தர்களை கண்காணிக்கவும், கடும் வெயில் நிலவுவதால் காட்டு தீ ஏற்படுவதை முன் கூட்டியே கண்காணிக்கவும் வனத்துறை சார்பில் வாங்கப்பட்டு உள்ள ட்ரோன்களை கொண்டு கண்காணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ட்ரோனில் அதிகபட்சமாக 10 கிலோ எடை கொண்ட பொருள்கள் வரை எடுத்துச் செல்லலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவசர மருத்துவ உதவிக்கான பொருள்களைக் கொண்டு செல்ல இவை பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், மலையேறும் பக்தர்கள் முழு உடல் பரிசோதனை செய்த பிறகே மலையேற அனுமதி வழங்கப்படும் என்று, பக்தர்கள் குழுவாகவும், வனத்துறை அனுமதித்த பாதைகளில் மட்டுமே செல்ல வேண்டும், மாற்றுப் பாதையில் செல்லக்கூடாது என வனத்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.