ஸொமாட்டோவில் பயன்பாட்டுக் கட்டணம் 25 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 20ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதாவது, ஒரு உணவு டெலிவரி ஆர்டருக்கு 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முன்னதாக 4 ரூபாயாக இருந்தது.
ஸொமாட்டோ நிறுவனம் நாள்தோறும் 20 லட்சம் முதல் 22 லட்சம் ஆர்டர்களை விநியோகம் செய்து வருகிறது. ஒரு ஆர்டருக்கு 1 ரூபாயை உயர்த்தினால் கூட அதன் லாபம் எகிறிவிடும். ஏற்கனவே, ஜனவரி மாதம் வாடிக்கையாளர்களுக்கான கட்டணத்தை ரூ.3 ஆக இருந்தது ரூ.4 ஆக உயர்த்தப்பட்டது.
ஏற்கனவே, ஸ்விக்கியில் உணவு டெலிவரி கட்டணம் ரூ.5 ஆக உள்ளது. இதுவரை ஸொமாட்டோ நிறுவனம் இதனை டெலிவரி கட்டணத்துடன்தான் கூடுதலாக வசூலித்து வந்தது. இதனை தற்போது ஸொமாட்டோவும் ரூ.5 ஆக உயர்த்திவிட்டது.
இந்த கட்டண உயர்வு, ஸொமாட்டோவின் கோல்டு உறுப்பினர்களுக்கும் பொருந்துமாம். மிக விரைவாக உணவுகளைச் சேர்க்கும் ஸொமாட்டோவின் பிளிங்கிட், தற்போது ஒவ்வொரு ஆர்டருக்கும் ரூ.2 கட்டணமாக வசூலிக்கிறது.