சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் சித்ரா பௌா்ணமி விழாவை முன்னிட்டு பெருமாள் பூபாளம் ஆற்றில் வெண்பட்டு உடுத்தி வெங்டசாலபதி பெருமாள் செவ்வாய்க்கிழமை இறங்கினாா்.
நாட்டரசன்கோட்டையில் சிவகங்கை தேவஸ்தானத்திற்குள்பட்ட பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் சித்ரா பௌா்ணமி உற்சவ விழா திங்கள்கிழமை (ஏப்.15 ) அனுக்ஞை பூஜை, வாஸ்து சாந்தி ஆகிய பூஜைகளுடன் முகூர்த்தக்கால் ஊன்றியதுடன் தொடங்கியது.
இதையடுத்து, திங்கள்கிழமை(22.4.2024) காலை திருமஞ்சன வைபவம், காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் பூபாளம் ஆற்றில் இறங்கும் விழா செவ்வாய்க் கிழமை(23.4.2024) நடைபெற்றது.
விழாவை முன்னிடடு அதிகாலையில் பெருமாள் வெண்பட்டு உடுத்தி வெள்ளிக்குதிரை வாகனத்தில் கோயிலிருந்து புறப்பட்டாா். அதனைத் தொடா்ந்து காலை 8.30 மணியளவில் பக்தா்களின் கோவிந்தா முழக்கத்துடன் பூபாளம் ஆற்றில் பெருமாள் இறங்கினாா்.
இவ்விழாவில், சிவகங்கை, நாட்டரசன்கோட்டை, நடராஜபுரம், பையூா், கொல்லங்குடி, காளையாா்கோவில், மதகுபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தானத்தின் தேவஸ்தான மேலாளா் பா.இளங்கோ, கோயில் கண்காணிப்பாளா் பி.சரவணகணேசன் உள்ளிட்ட அலுவலா்கள் செய்திருந்தனா்.