பள்ளிக்கரணையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலைக்கு முயன்று கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், இன்று உயிரிழந்தார்.
சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (26). பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கரணை அடுத்த ஜல்லடையாம்பேட்டை கணேஷ் நகர் பகுதியில் வசித்த ஷர்மிளா(22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பெண்ணின் வீட்டாரிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பிரவீன் மற்றும் ஷர்மிளா ஆகியோர் பெரியார் திடலில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டு எழும்பூர் ரெஜிஸ்டர் அலுவலகத்தில் பதிவு செய்து பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவில் வசித்து வந்துள்ளனர். கூலி வேலை மற்றும் மெக்கானிக் தொழில் செய்து வந்த பிரவீன் கடந்த பிப்ரவரி 24 ம் தேதி இரவு 8:30 மணியளவில் பள்ளிக்கரணை பிரதான சாலையில் உள்ள தனியார் மதுபான விடுதிக்கு அருகே 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பிரவீனை கொடூரமாக அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனர்.
தாம்பரம் போலீசாரின் விசாரணையில் பிரவீன் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சர்மிளாவின் உடன் பிறந்த அண்ணனான ஜல்லடையம்பேட்டை முதல் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்ற குட்டி அப்பு மற்றும் அவரது நண்பர்களான சித்தலப்பாக்கம் இரண்டாவது குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்த விஷ்ணு ராஜ், பள்ளிக்கரணை ராஜலட்சுமி நகர் 8வது தெரு பகுதியை சேர்ந்த ஸ்ரீ ராம், பள்ளிக்கரணை 6வது குறுக்கு தெரு பகுதியை சேர்ந்த ஜோதிலிங்கம், சித்தலப்பாக்கம் எம்ஜிஆர் நகர் இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீபன் குமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த நவம்பர் மாதம் தினேஷின் தங்கை ஷர்மிளா வீட்டின் எதிர்ப்பை மீறி பிரவீனை திருமணம் செய்து கொண்ட சம்பவத்தில் பழி வாங்குவதற்காக கொலை செய்தது தெரிய வந்தது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நடந்த இந்த ஆணவப்படுகொலை சம்பவமானது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த நிலையில் தனது கணவர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமாக அமைந்த தனது தந்தை துரை, தாய் சரளா மற்றும் தனது மற்றொரு சகோதரர் நரேஷ் ஆகிய மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யவில்லை, கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என சர்மிளா, பிரவீன் குடும்பத்தாரிடம் தொடர்ச்சியாகவே கூறி வந்ததாகவும், மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
கணவர் இறந்ததால் கடும் மன உளைச்சலில் இருந்த ஷர்மிளா கடந்த 14ஆம் தேதி அம்பேத்கர் நகரில் உள்ள தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஷர்மிளாவின் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கழுத்துப்பகுதியில் இருந்த எலும்பு மற்றும் நரம்புகள் பாதிக்கப்பட்டதால் கோமா நிலைக்குச் சென்ற ஷர்மிளாவை மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்து அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 15ம் தேதி முதல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஷர்மிளா நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த ஆணவக்கொலை வழக்கு கொலையாளிகளுக்கு சாதகமாக நடந்து வந்ததாகவும், முதல் தகவல் அறிக்கையில் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட பிரவீன் தந்தை கையெழுத்து போலியாக போடப்பட்டிருப்பதாகவும், பிரவீன் தந்தைக்கு ஆங்கிலமே தெரியாது என பிரவீனின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
ஷர்மிளா மிரட்டப்பட்டதாகவும், ஆணவப் படுகொலைக்கு முக்கிய காரணம் ஷர்மிளாவின் அண்ணனான நரேஷ் என கூறப்படுகிறது.
பிரவீன் சாதி வெறிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஷர்மிளாவின் தாய், தந்தை மற்றும் மற்றொரு அண்ணன் ஆகியோர் சேர்க்கப்பட வேண்டும் எனவும் நீதி கிடைக்க வேண்டும் எனவும் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் எனவும் பிரவீனின் தாய் முதலமைச்சர் அலுவலகம், தலைமைச் செயலாளர் அலுவலகம், தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அலுவலகம், தாம்பரம் காவல் ஆணையரகம் ஆகிய இடங்களில் கடந்த 22 ஆம் தேதி புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].