உணவகங்களில் டிரை ஐஸ் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
கர்நாடகத்தில் சில நாள்களுக்கு முன்பு, ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் வாய் எரிச்சலால் துடிக்கும் விடியோ இணையத்தில் வைரலானது. திரவ நைட்ரஜன் கலந்த டிரை ஐஸ் கலந்ததால் இந்த எரிச்சல் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு முன்னதாக குருகிராம் ஹோட்டலில் டிரை ஐஸ் சாப்பிட்ட 5 இளைஞர்கள் ரத்த வாந்தி எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த நிலையில், திரவ நைட்ரஜன் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஐஸ் க்ரீம், ஸ்மோக் பிஸ்கட் போன்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
மேலும், டிரை ஐஸ் கலந்த பொருள்களையும் விற்கக் கூடாது என்றும், குழந்தைகளுக்கு டிரை ஐஸ் கொடுக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரை ஐஸ் கலந்த பொருள்களை உண்பதால், குழந்தைகள் கண் பார்வை குறைபாடு, பேச்சு பறிபோகும் சூழலும், சில நேரங்களில் உயிருக்குகூட ஆபத்து ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள உணவகங்கள், பொருள்காட்சிகளில் திரவ நைட்ரஜன் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பொருள்கள் விற்கப்படுகிறதா என்று தீவிர சோதனையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.